ஜூனியர் உலக கோப்பை கால்பந்து திருவிழாவில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 0-3 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவிடம் மோசமான தோல்வியை தழுவியது.
17-வது ஜூனியர் உலக கோப்பை (17 வயதுக்கு உட்பட்டோர்) கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ‘ஏ’ பிரிவில் இந்தியா, அமெரிக்கா, கொலம்பியா, கானா, ‘பி’ பிரிவில் பராகுவே, மாலி, நியூசிலாந்து, துருக்கி, ‘சி’ பிரிவில் ஈரான், கினியா, ஜெர்மனி, கோஸ்டாரிகா, ‘டி’ பிரிவில் வடகொரியா, நைஜர், பிரேசில், ஸ்பெயின், ‘இ’ பிரிவில் ஹோண்டுராஸ், ஜப்பான், நியூகலிடோனியா, பிரான்ஸ், ‘எப்’ பிரிவில் ஈராக், மெக்சிகோ, சிலி, இங்கிலாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 16 அணிகள் 2-வது சுற்றுக்கு முன்னேறும்.
இதில் டெல்லி நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய லீக் ஆட்டத்தில் அறிமுக அணியான இந்தியா, அமெரிக்காவை (ஏ பிரிவு) எதிர்கொண்டது. அனுபவம் வாய்ந்த அமெரிக்க வீரர்கள் எதிர்பார்த்தது போலவே தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தினர். 30-வது நிமிடத்தில் இந்திய வீரர் ஜிதேந்திர சிங் அமெரிக்க கேப்டன் ஜோஷ் சர்ஜென்ட்டை, கோல் பகுதியில் வைத்து பிடித்து இழுத்ததால் அந்த அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிட்டியது. பெனால்டியை அமெரிக்க கேப்டன் ஜோஷ் சர்ஜென்ட் எளிதில் கோலாக்கினார்.
தொடர்ந்து அமெரிக்க வீரர்களின் பக்கமே பந்து அதிகமாக (57 சதவீதம்) சுற்றிக் கொண்டிருந்தது. உள்ளூர் ரசிகர்களின் ஆரவாரம் அரங்கை அதிர வைத்தாலும் இந்திய வீரர்களால் அமெரிக்காவின் கோல்பகுதிக்குள் அவ்வளவு எளிதில் ஊடுருவ முடியவில்லை. ஒரே ஒருமுறை மட்டுமே இலக்கை நோக்கி ஷாட் அடித்தனர். அதற்கும் பலன் கிட்டவில்லை.
அதே சமயம் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்திய அமெரிக்கா மேலும் இரு கோல்களை திணித்தது. கிறிஸ் டர்கின் 51-வது நிமிடத்திலும், ஆண்ட்ரூ கார்ல்டென் 84-வது நிமிடத்திலும் கோல் போட்டு அதிர்ச்சி கொடுத்தனர். ‘உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் கோல் அடித்த முதல் இந்தியர்’ என்ற அதிர்ஷ்டம் யாருக்கு கிடைக்கப்போகிறது என்பதை காண ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடைசி வரை இந்திய இளம் படையால் ஒரு கோல் கூட திருப்ப இயலவில்லை. முடிவில் அமெரிக்க அணி 3-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை தோற்கடித்தது. இந்திய கோல் கீப்பர் தீரஜ் சிங், சில கோல் வாய்ப்புகளை முறியடித்தார். இல்லாவிட்டால் அமெரிக்கா மேலும் சில கோல்களை அடித்திருக்கும்.
முன்னதாக இதே மைதானத்தில் நடந்த தொடக்க லீக்கில் முன்னாள் சாம்பியன் கானா அணி 1-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தியது. கானா வீரர் சாதிக் இப்ராகிம் 39-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார்.
மும்பையில் நடந்த நியூசிலாந்து- துருக்கி அணிகள் இடையிலான பரபரப்பான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. துருக்கி வீரர் அகமது குடுச்சு 18-வது நிமிடத்திலும், நியூசிலாந்து கேப்டன் மேக்ஸ் மாட்டா 58-வது நிமிடத்திலும் கோல் போட்டனர். கடைசி நேரத்தில் முரட்டு ஆட்டம் காரணமாக 2-வது முறையாக மஞ்சள் அட்டை பெற்ற மேக்ஸ் மாட்டா களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதன் காரணமாக அடுத்த லீக் ஆட்டத்தில் அவர் விளையாட முடியாது.
இன்னொரு ஆட்டத்தில் பராகுவே அணி 3-2 என்ற கோல் கணக்கில் மாலியை வீழ்த்தியது.
இன்று (சனிக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் ஜெர்மனி-கோஸ்டாரிகா (கோவா, மாலை 5 மணி), பிரேசில்-ஸ்பெயின் (கொச்சி மாலை 5 மணி), ஈரான்-கினியா (கோவா, இரவு 8 மணி), வடகொரியா-நைஜர் (கொச்சி, இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை தூர்தர்ஷன் ஸ்போர்ட்ஸ், சோனி டென்-2, சோனி டென்-3 ஆகிய சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக